திமுகவின் பிரபல தலைமைக் கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மேடை பேச்சு பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அவர் பெண்கள் குறித்து அவதூறாகவும், ஆபாச வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பூ குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிய வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எழும்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தமிழக அரசு தயாரித்த உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சில வார்த்தைகளை தவிர்த்து பேசியது மட்டுமல்லாமல் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என அழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழகப் பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆளுநர் மளிகையின் துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் தொடர்பாக காவல்துறை தரப்பில் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கினை நீதிமன்றத்தின் மூலமாக தொடருமாறு தமிழக அரசுக்கு சென்னை மாநகரக் காவல்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்படி நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இதனிடையே, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து திமுக மேடைகளில் சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது பேசி வந்தார்.
அந்த வகையில், அதே ஆண்டின் ஜூன் மாதத்தின் போது திமுக மேடை ஒன்றில் நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்தார். இது பேசுபொருளானதை தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன் பின்னர், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, திமுக கழக தலைமையிடம் மன்னிப்பு கேட்டதால் அவர் மீண்டும் திமுக தலைமை கழகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டார். ஆளுநர் மீதான அவதூறு பேச்சு மற்றும் குஷ்பூக்கு எதிரான ஆபாச பேச்சு ஆகிய இரு வழக்குகளும் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அந்த வழக்குகளை விசாரணை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் ரேவதி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது என்று கூறி அவருக்கு 3 ஆண்டுகள், 3 மாத சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய 1 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/14/sivaji-2026-02-14-17-10-45.jpg)