DMK personally invites TVK Photograph: (TVK)
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தினுடைய அறிவிப்பின்படி தமிழக தலைமைச் செயலகத்தில் கடந்த 27 ஆம் தேதி மாலை 6 மணியளவில் அவசர கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் மூலமாக இந்த தகவல் வெளியாகி இருந்தது.
Advertisment
அதன்படி இன்று (29/10/2025) தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisment
அதேநேரம் தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அது தொடர்பான அறிவிப்பில் 'மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாயகத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்துச் செயல்படுத்தி வருகிறது.
இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம். மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலக்திற்கு திமுக சார்பில் வந்த பூச்சிமுருகன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பதற்கான கடிதத்தை அளித்து நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
Follow Us