DMK MP Wilson said The judges have only expressed their opinions, not issued orders at bill deadline
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (20.11.2025) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் சந்திரசேகர் என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியதாவது, “மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மாநில மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும். அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு.
அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள் தான் உள்ளன. மத்திய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை. வேறுபாடுகளைத் தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான். ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் ஒரு மசோதா மீது நீண்ட காலம் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் இருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம். அதே சமயம் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்த முடியும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று கூறினர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியது கருத்து தானே தவிர உத்தரவு இல்லை என திமுக எம்.பியும் வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வில்சன் எம்.பி, “குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாவுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். ஒப்புதல் அளியுங்கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்த முடியும் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்தாக சொல்லியிருக்கிறார்கள். அதனை உத்தரவாக சொல்லவில்லை. அதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்தாக சொல்லிருக்கிறார்கள். இந்த கருத்து உச்ச நீதிமன்றத்தையே கட்டுப்படுத்தாது. அதனால் தமிழக அரசு பெற்ற தீர்ப்பை இது கட்டுப்படுத்தாது.
இது ஆலோசனை மாதிரி. இந்த ஆலோசனையும் ஜனாதிபதி கூட எடுத்து கொள்ளலாம் எடுத்து கொள்ளாமலும் கூட விடலாம். இந்த கருத்து தமிழக ஆளுநர் மீது போட்ட வழக்கை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சொல்லிவிட்டார்கள். இந்த கருத்து எந்த விதத்திலும் எங்களுடைய உரிமையை பாதிக்காது. தமிழ்நாட்டினுடைய மக்களின் எண்ணங்களுக்கு எதிராக தமிழக ஆளுநர் மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம்” என்று கூறினார்.
Follow Us