தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்பு திருச்சி அரியலூர், திருவாரூர் நாகை உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக அரசு குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சித்ததற்காக த.வெ.க தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 20.09.2025 மதியம் 12 மணியளவில் சமூக வளைதளமான யூட்டிப் மற்றும் தொலைகாட்சிகளில் நேரலை என்ற பெயரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தையும் மிகவும் கேலமாகவும் அருவருக்கத்தக்க ஆபாசமாகவும் பேசிக்கொண்டிருந்தார். மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் பெற்று 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இதுவரை எவ்வித அவப்பெயரையும் எடுக்காத ஒரு தலைவர், சிறந்த தமிழ்நாடு முதலமைச்சர் என்ற நற்பெயரை இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் மத்தியில் பெற்ற ஒருதலைவரை பின் தொடர்ந்து நான் திமுகவில் இருந்து வருகிறேன்.
அப்படிப்பட்ட ஒரு முதலமைச்சரையும் அவரது குடும்பத்தையும் மிகவும் அவதூறு பேசி அதன் மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, சட்ட ஒழுங்குக்கு பிரச்சணையை ஏற்படுத்தி அதனை பயன்படுத்தி தனது அரசியல் சுய லாபம் அடைய எண்ணி பொதுமக்கள் மத்தியில் பேச்சுரிமை என்ற பெயரில் உண்மைக்கு மாறான, பொய்யான செய்தியையும் பரப்பி ஆபாசமாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் பேசி வரும் விஜய் பேசியதை கேட்டு எனக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இது தொடர்பாக மணப்பாறை காவல் ஆய்வாளரிடம் 20-ம் தேதி புகாரை கொடுத்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது எனக் குறிப்பிட்டு புகாரை வாங்க மறுத்துவிட்டார். எனவே மேற்படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.