'DMK is intimidating quarry owners' - Edappadi Palaniswami alleges Photograph: (admk)
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இந்தியாவிலேயே இது போன்று எந்த ஆட்சியும் இல்லை. பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்ட ஒழுங்கு அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது'' என திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் 'அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜகவினர் விருப்பப்பட்டதாக செங்கோட்டையன் கூறியிருப்பது' குறித்து எழுப்பிய கேள்விக்கு, ''இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதெல்லாம் முடிந்து போன விஷயம். அவர் தற்பொழுது எங்கள் கட்சியிலேயே இல்லை. அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அதிமுகவைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷாவே உறுதியாகச் சொல்லிவிட்டார். நிதியே ஒதுக்காமல் பல்வேறு திட்டங்களுக்கு திமுக அரசு அடிக்கல் மட்டும் நாட்டி வருகிறது. அதிமுக ஆட்சியை திமுகவால் குறைசொல்ல முடியாததால் பாஜக உடனான கூட்டணியைத் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். என் மகனையோ மருமகனையோ கட்சியில் ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
முதலீடு ஈர்ப்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளை காகிதத்தை காண்பிக்கிறார்கள். மதுரை மாநகராட்சியில் 200 கோடி வரி வருவாய் நடந்திருக்கிறது. திமுக அரசாங்கம் தான் இதையும் கண்டுபிடித்து இருக்கிறது. இவ்வளவு ஊழல் நடைபெறுகின்ற ஒரே அரசு திமுக அரசு. ஜல்லி குவாரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் அண்மையில் வந்த செய்தி, எங்களுக்கு கிடைத்த தகவல் ஒவ்வொரு குவாரி உரிமையாளர்களும் திமுக மேலிடத்திற்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஏக்கருக்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என இப்பொழுது ஒரு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே குவாரியில் ஒரு டன்னுக்கு தன்னுக்கு இவ்வளவு விலை நிர்ணயம் செய்தார்கள். நாங்கள் எதிர்ப்பு கொடுத்தவுடன் அதை கைவிட்டு விட்டு மீண்டும் இப்பொழுது குவாரி உரிமையாளர்களை மிரட்டுகின்றார்கள். ஒவ்வொரு குவாரிக்கும் பணம் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்றார்.
Follow Us