தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், நாளை (22-02-26) முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

Advertisment

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இன்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான ஏழு பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை திமுக அறிவித்தது. அந்த குழுவில், அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி திருச்சி சிவா, எம்.பி ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

நாளைய தினம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் நாளை (22-02-26) தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி 3 தொகுதியிலும் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், அதே எண்ணிக்கையோ அல்லது அதற்கும் குறைவான என்ணிக்கையோ இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. 

Advertisment