DMK invites coalition parties to meet for talks on February 22nd
விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக வருகின்ற 22 தேதி அறிவிக்க இருக்கிறது. இதையடுத்து, 23 தேதி முதல் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென்று திமுகவை வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் குறித்தான நடைமுறைக்கான அறிவிப்புகளை திமுக வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி முதலில் அழைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போதும், முஸ்லீம் லீக் கட்சியே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு முதலில் அழைக்கப்பட்டது. அதே போல முன்னாள் முதல்வர் கலைஞர், கட்சியை வழி நடத்திய காலங்களிலும், இந்த கட்சிக்குத் தான் முதலில் அழைப்பு விடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய முஸ்லீம் லீக் கட்சி ஒரு தேசிய கட்சியாகும். கூட்டணியில் இக்கட்சி கடந்த தேர்தலில் மூன்று இடங்களைப் பெற்றது. இந்த முறை ஐந்து இடங்களைக் கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இக்கட்சி கடந்த 25 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சியை அடுத்து மற்ற கட்சிகள், ஒவ்வொன்றாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக வின் கூட்டணி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக்கான குழுவில் ஏ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை தாங்குவர் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, திமுக கூட்டணியின் இறுதி நிலை இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள் என்பதும், இந்த குழு பேச்சுவார்த்தை நடத்திய பின் உறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us