தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் நடைபெற உள்ளது.  இந்நிலையில் இந்த விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கான விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பெரியார் விருது திமுக துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி க்கு வழங்கப்படும். அண்ணா விருது தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும், பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள்தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு வழங்கப்படும்.

Advertisment

கலைஞர் விருது நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும் அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. இராமச்சந்திரனுக்கும் வழங்கப்படும். பாவேந்தர் விருது திமுக மூத்த முன்னோடியும் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கும் வழங்கப்படும். பேராசிரியர் விருது திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் இராமலிங்கத்திற்கு வழங்கப்படும். 

மு.க.ஸ்டாலின் விருது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவரும்,  தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டு முப்பெரும் விழா கரூரில் நடைபெறவுள்ளது. கருப்பு - சிவப்புப் பாதையில் கொள்கை நடைபோடும் தீரர்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளது திமுக தலைமைக் கழகம். விருதாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.