'டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடி: தேர்வு அதிகாரி மாற்றப்பட்டாரா, இல்லையா? தமிழக மக்களை முட்டாள்களாக்க திமுக அரசு முயலக்கூடாது! 'என அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு தொகுதி 2 நிலை அதிகாரிகளை தேர்வு செய்வதற்காக கடந்த 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த போட்டித்தேர்வுகள் குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த அதிகாரி இன்னும் பணியில் தொடர்வதற்கு திமுக அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சார்-பதிவாளர், துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளர் நல ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகள், உதவியாளர் கணக்காளர், தொகுதி உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 ஏ பணிகளுக்கு 828 பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைப் போட்டித்தேர்வுகள் கடந்த 9ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்தது. ஆனால், அதற்கான நுழைவுச் சீட்டுகளை வழங்குவதில் நடந்த குளறுபடிகளால் தேர்வுகள் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே அத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 18 ஆயிரம் தேர்வர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தொகுதி 2 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை, அதிலும் குறிப்பாக வெறும் 18,000 பேர் மட்டுமே எழுதக்கூடிய தேர்வுகளை நடத்துவது மிகவும் எளிதானது. டி.என்.பி.எஸ்.சியின் அடிமட்ட பணியாளர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தால் கூட மிகவும் செம்மையாக நடத்தி முடித்திருப்பார்கள். ஆனால், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் 3 பேரின் கண்காணிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டித் தேர்வு குளறுபடிகளால் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அனைத்து மட்டங்களிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்த அ.சண்முகசுந்தரம் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பதாகவும், அவருக்கு பதில் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் செயலாளராக பணியாற்றி வந்த வெங்கடப்பிரியா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பிலிருந்தே அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அனைத்து ஊடகங்களிலும் இது குறித்து விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டன. தொகுதி 2 தேர்வுகளை நடத்துவதில் நடந்த குளறுபடிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், குறைந்த பட்சம் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே என்று பொதுமக்களும், தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட தேர்வர்களும் மனநிறைவு அடைந்திருந்தனர்.
ஆனால், அனைத்துமே தமிழ்நாட்டு மக்களையும், தேர்வர்களையும் ஏமாற்றுவதற்காக திமுக அரசு செய்த ஏற்பாடு என்பது இப்போது அம்பலமாகியிருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி பணியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் அ.சண்முக சுந்தரம் தொடர்ந்து தேர்வாணையத்திற்கு வந்து, தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குரிய பணிகளை செய்து வருகிறார். இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள தொகுதி 2 பணிகளுக்கான பொது அறிவுத் தாள் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு கூட நேற்று மாலை அ.சண்முக சுந்தரம் பெயரில் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வழக்கமாக ஓர் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய அதிகாரி வந்து பொறுப்பேற்கும் வரை மாற்றப்பட்ட அதிகாரி அதே பொறுப்பில் தொடருவது இயல்பானது தான். ஆனால், ஓர் அதிகாரி ஒரு பணியிலிருந்து அகற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டால், அவர் உடனடியாக அந்தப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். ஆனால், அந்த மரபுகளுக்கு மாறாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியில் அ.சண்முகசுந்தரம் இப்போது வரை தொடர அனுமதிக்கப்படுவது ஏன்?
ஒருவேளை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு பதிலாக புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக வெங்கடப் பிரியா நியமிக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அ.சண்முகசுந்தரம் இடமாற்றம் குறித்த செய்தியை அரசே ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டு, அதை செயல்படுத்த மறுப்பது மோசடி ஆகும்.
தொகுதி 2 தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பை தணிக்கும் வகையில் தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரி நீக்கம் பற்றி செய்தி வெளியிட்டு விட்டு, அந்த கொந்தளிப்பு அடங்கிய பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை காப்பாற்றும் முயற்சியில் அரசு நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இது பற்றி எதுவுமே தெரியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வழக்கம் போல சாவி கொடுத்த பொம்மையைப் போல அடுத்து திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற வெற்று வசனங்களை பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அரசு நிர்வாகம் இந்த லட்சணத்தில் தான் நடைபெறுகிறது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடிகள் தொடர்பான விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடக்கூடாது. தேர்வு குளறுபடிகள் காரணமாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டாரா, இல்லையா? காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார் என்றால், அவர் அந்தப் பணியில் இன்னும் தொடர அனுமதிக்கப்படுவது ஏன்? ஒருவேளை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், அதுகுறித்து அனைத்து ஊடகங்களிலும் வெளியான செய்திகளை அரசு மறுக்காதது ஏன்? என்பது குறித்து திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தொகுதி 2 தேர்வு குளறுபடிகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; தவறு செய்த அனைத்து அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/085-2026-02-12-21-20-45.jpg)