DMK executive resigns to alleged mineral resources are being transported to Kerala
தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகக் குற்றம்சாட்டி திமுக நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்தவர் கடையம் சு.சந்திரசேகர். இவர் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், தான் வகித்த பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘திமுக கழகத்தில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக கழக பணியாற்றினேன். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் ஏராளமான கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்களால் பொது மக்கள் பெரும் இன்னலுக்குள் உள்ளாகியுள்ளனர். மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தீமைகளை பற்றி பலமுறை தங்களுக்கு எடுத்துரைத்தும் பலன் இல்லை. மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக இருந்து கொண்டு எங்கள் பகுதி சுற்றுச்சூழலை காப்பாற்ற, பாதுகாக்க முடியவில்லை எனவே எனது பொறுப்பிலிருந்து விலகுகிறேன். ஐயா நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடத்தில் சுயமரியாதையை கற்ற மாணவன் ஆகவே எனது சுயமரியாதையை காப்பாற்ற அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us