DMK election manifesto preparation committee holds intensive consultations
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அமைத்தது. இந்த குழுவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் முன்னாள் எம்.பி எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எம்.எல்.ஏ எழிலன், முன்னாள் எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தொழில் முனைவோர் என கிட்டத்தட்ட 12 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மக்களிடம் இருக்கக்கூடிய பிரச்சனைகள், ஒவ்வொரு துறை சார்ந்தும் என்னென்ன திட்டங்கள் வகுக்க வேண்டும், அதற்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை குழு இன்று (22-12-25) ஆலோசனையில் ஈடுபட்டது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன மாதிரியான வாக்குறுதிகள் கொடுக்கலாம் என்பது தொடர்பாக இந்த குழுவினர் முதன்முறையாக கூடி ஆலோசனை நடத்தினர்.
Follow Us