பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (04-03-26) மாலை கையெழுத்தானது.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், திமுக - காங்கிரஸ் கடந்த 1 வாரமாக தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நீடித்து வந்தது. அதாவது, காங்கிரஸ் திமுகவிடம் 40+ இடங்களும், 2 ராஜ்யசபா சீட்டும் கேட்டதாகவும், ஆனால் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒதுக்கியது போலவே காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டு மட்டுமே கொடுக்க முடியும் என திமுக கறார் காட்டியது. அதற்கு இசைவு காட்டாத காங்கிரஸ், குறைந்தபட்சம் 35 முதல் 48 இடங்களாவது வேண்டும் என திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக - காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தரப்பில் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை கையெழுத்திட்டனர். அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisment