DMK announces that voluntary petitions will be accepted from the 20th for election
வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் வரும் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளனர். தமிழகம் வரும் அவர்கள், சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் விரைவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விரும்புவோர் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் என திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு அறிவிப்பில், “நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 20-2-2026 வெள்ளிக்கிழமை முதல் 2-3-2026 திங்கட்கிழமை வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன். தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.25,000யும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000யும் நிர்ணயிக்கப்படுகிறது. வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்பக் கட்டணம் பின்னர் திருப்பித் தரப்படும். விண்ணப்பபடிவம் தலைமைக் கழகத்தில் ரூ..1,000 வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us