DMDK alliance talks with AIADMK? Meeting held during Shivaratri festival
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணியை இறுதி செய்து வருகின்றன. இருப்பினும், தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. மேலும் அக்கட்சி திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடங்கள் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சி விடாப்பிடியாக இருப்பதாலும் அதற்கு இரு கட்சிகளும் சம்மதம் தெரிவிக்காததாலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தேமுதிகவுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த தகவலை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் சிவராத்திரி பண்டிகை இன்று (15-02-26) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணி முதல் சிவராத்திரி கொண்டாடங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் பங்கேற்றுள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து இருக்கையில் அமர்ந்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி அருகே பிரேமலதா விஜயகாந்த் அமர்ந்துள்ளார். ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிடம் எஸ்.பி வேலுமணி பிரேமலதாவை, அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வின் போது பா.ஜ.க மற்றும் அதிமுக தலைவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow Us