தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இன்று திமுகவுடன் கூட்டணியை தொடங்குகிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டணி 200 பிளஸ் பெற்று அமோக வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறேன். திமுகவின் தலைமையில் ஸ்டாலின் என்னென்ன தொகுதிகள் என்பதை அறிவிப்பார். விஜயகாந்த் இருந்தபோதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது. தேமுதிக சார்பில் குழு அமைத்து குழுவின் மூலம் எத்தனை இடங்கள் எந்தெந்த தொகுதிகள் எல்லாம் பேசி தலைமையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் தேமுதிக கூட்டணி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி 'சட்டப்பேரவைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். பின்னர் வந்து பதில் சொல்கிறேன்'' என்று அங்கிருந்து நகர்ந்தார்.

Advertisment