நடப்பாண்டு தீபாவளியானது வார இறுதியின் தொடர்ச்சியாக வரும் திங்கட்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை (நேற்று) மாலையிலிருந்தே பலரும் சொந்த ஊர்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழக அரசு சார்பில் அக்.21 ஆம் தேதி செவ்வாய் கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டு நேற்றே சிபிஐ வழக்கை கையில் எடுத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கட்சி சார்பில் யாரும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியினுடைய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்ற அறிவுறுத்தல் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், துக்கம் அனுசரிக்கும் வகையிலும் விஜய்யின் அறிவுறுத்தல் படி இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.