தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக திடீரென  கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அமித்ஷாவின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகும் முடிவை அறிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ‘விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?’ என்று கேட்டனர். நான், ‘ஆமாம். விஜயகாந்த் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அப்படி ஒரு தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார்’ என்று என் மனதில் பட்டதை கூறினேன். உடனே, ‘விஜய்யுடன் கூட்டணியா?’ என்று கேட்கிறீர்கள். சிலர், ‘டிடிவி தினகரன் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார்’ என்று எழுதுகிறார்கள். கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் முடிவு அறிவிப்போம்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது அவசரமான முடிவு அல்ல; நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு. அரசியலை நான் வியாபாரமாகப் பார்க்கவில்லை. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜக நினைத்தது. நாங்கள் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினோம் என்பது பாஜகவிற்கு நன்றாகத் தெரியும். அம்மாவின் கட்சியில் உள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும், அமமுகவை டெல்லியில் உள்ள தலைமை மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு அழைத்துவிடும் என்று நம்பினால், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். அமமுக மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர, எங்களுக்கு உள்ள இடர்பாடுகளை பாஜக களைய வேண்டும். இது டிடிவி தினகரன் மட்டும் எடுத்த முடிவு அல்ல; அமமுக தொண்டர்களின் முடிவு.

முன்னாள் பாஜக தலைவர் இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது. ஆனால், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் சரியில்லை. பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம். அதிமுகவிற்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான பிரச்சனையை நயினார் நாகேந்திரனால் சரியாகக் கையாள முடியவில்லை,” என்றார்.