தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருந்ததாக சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று (21-07-25) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனை மேற்கோள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, சில பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கிரீம்ஸ் சாலையில் இருந்து தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தேனாம்பேட்டையில் இருந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு தனது காரில் திரும்பினார். அவருடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக 3 நாட்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் நலமாக இருக்கிறார். இன்று காலை சில பரிசோதனைகள் எடுக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். 3 நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து வருவார்” என்று தெரிவித்துள்ளார்.