தலைநகர் டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ஏற்கனவே, டெல்லி அரசு பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் பெண்களின் கல்வியை மேம்படுத்தும் வகையிலான, ‘லட்சாதிபதி மகள் திட்டம்’ எனும் புதிய அறிவிப்பை, முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

Advertisment

இந்த திட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லியின் மகள்களுக்கு நாங்கள் புதிய திட்டத்தை அறிவித்துள்ளோம். அதன்படி, பெண்கள் குழந்தைகள் பிறக்கும் போதே அவர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும். அதில், ரூ.11 ஆயிரம் செலுத்தப்படும். பின்னர், அந்த குழந்தைகள் 1,6,9,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை நிறைவு செய்யும் போது தலா ரூ.5000 கணக்கில் வரவு வைக்கப்படும். பின்னர், அவர்கள் பட்ட படிப்பு முடிக்கும் போது ரூ.20000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Advertisment

இவ்வாறாக, ஒரு பெண் குழந்தை கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வரும் தருணத்தில் அவர்களது கணக்கில் அரசு சார்பில் ரூ.56,000 வரவு வைக்கப்படும். பெண் குழந்தைகள் பட்ட படிப்பை முடித்துவிட்டு வரும் போது இந்த பணத்தின் மதிப்பு வட்டியுடன் சேர்த்து மொத்தமாக ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கும். இதனால், டெல்லியில் உள்ள பெண்கள் படிப்பை முடித்துவிட்டு வரும்போது, அவர்கள் லட்சாதிபதிகளாக இருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதில், விண்ணப்பிக்கும் முறையிலிருந்து பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் வரையிலான அனைத்து செயல்பாடுகளும் இணையதளத்தின் வழியாகவே நடைபெற உள்ளது. இதனால், மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று வரிசையில் காத்திருக்கும் அவசியம் இல்லை. இந்த திட்டத்திற்காக, ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Advertisment