வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், வெனிசுலா நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறி கட்டிடங்கள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளது. குறிப்பாக லாகார்லோட்டா விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு கரும்புகை கிளம்பியதால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் 40 வெனிசுலா மக்கள் இறந்துள்ளதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்து நாடு கடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ படத்தை வெளியிட்டு வெனிசுலாவில் இனிமேல் எங்கள் ஆட்சி தான் என டிரம்ப் அதிரடியாக தெரிவித்தார். இது குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது, “புதிய அரசு வெனிசுலாவை ஆளும் வரை, அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும். அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா வலுவான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும்” என்று தெரிவித்தார்.
வெனிசுலாவுக்குள் அத்துமீறி நுழைந்து அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்து அந்நாட்டை அமெரிக்காவே தற்காலிகமாக நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியிருந்த நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் (56) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான டெல்சி ரோட்ரிக்ஸ், 2018ஆம் ஆண்டில் வெனிசுலாவில் முதல் பெண் துணை அதிபராக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், அந்நாட்டின் முக்கிய துறைகளான எண்ணை வளம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் இருந்து வந்தார். நிக்கோலஸ் மதுரோவிற்கு மிக நெருக்கமான விஸ்வாசியாக பார்க்கப்படும் டெல்சி ரோட்ரிக்ஸை, தேசிய பாதுகாப்பு கருதி அவரை இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/trumpdelsi-2026-01-04-10-31-32.jpg)