சமூகவலைத்தளம் வந்த பிறகு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அநாகரிகமாக பேசலாம், எழுதலாம், வீடியோ பதிவு செய்யலாம், அவதூறு பரப்பலாம் என்பது சாதாரணமாகி விட்டது. பிரபலமானவர்களின் வரலாறோ அவர்கள் செய்த வேலைகள், மாற்றங்கள் குறித்தெல்லாம் துளி அளவு கூட தெரிந்து வைத்திருக்காதவர்கள் போகிற போக்கில் சர்வசாதாரணமாக அவதூறை வாரி இறைத்துப் போய் விடுகிறார்கள்.
பத்திரிகை உலகில் இதழியல் போராளியாக வலம் வருகிற நக்கீரன் ஆசிரியர், பல சமூக சீர்கேடான விசயங்களை துணிச்சலுடன் வெளி உலகிற்கு எடுத்துக் காண்பித்தவர். வீரப்பனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதிலிருந்து பொள்ளாச்சி பாலியல் வழக்கை வெளிக்கொண்டு வந்தது வரை நக்கீரன் ஆசிரியரின் இதழியல் துறையில் செய்த சாகசங்கள் நிறைய சொல்லலாம்.
இப்படியான நக்கீரன் ஆசிரியரையும் அவரது குடும்பத்தினரையும் ‘அமைதிப்படை தளபதி குரூப்ஸ்’ என்ற பேஸ்புக் பக்கத்திலிருந்து அநாகரீகமான முறையில் பேசியும், தனிமனித தாக்குதல்களையும் சமூகவலைத்தளங்களில் செய்து வந்தனர். அவர்கள் மீது நக்கீரன் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வீடியோவில் பேசியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக் பக்கத்தில் நீக்கப்படாமல் இருந்த சில வீடியோக்கள் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் சொன்னதன் பேரில் தற்போது நீக்கமும் செய்யப்பட்டுள்ளது.
Follow Us