Decision to resume search for missing Malaysia Airlines flight MH370 with 239 people on board
11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியாவின் விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய ஏர்லைனுக்கு சொந்தமான MH370 விமானம் ஒன்று, கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டது. இந்திய பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த விமானம் மாயமானது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த 239 பயணிகளின் நிலை என்ன ஆனது? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது விமானம் விபத்தில் சிக்கியதா? என்ற பல கேள்விகள் எழுந்தது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஆண்டுக்கணக்கில் மலேசிய அரசு தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆனால், விமானம் இருந்த இடமே தெரியாததால் இந்த தேடும் பணி கடந்த 2017ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, ஆப்பிரிக்கா கடற்கரை மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள தீவில் மாயமான விமானத்தில் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், விமானத்தின் பெரும்பகுதி கிடைக்காததால் விமானத்திற்கு என்ன ஆனது? எப்படி விழுந்தது என்று கேள்விகள் உலகம் முழுவதும் எழுந்தது.
காணாமல் போன விமானத்திற்கு என்ன ஆனது? என்பது இன்று வரை மர்மமாகவே உள்ள நிலையில், விமானத்தை தேடும் பணியில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ‘No Find, No Fee’ என்ற ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் ஓசன் இன்பினிட்டி (Ocean Infinity) நிறுவனம், டிசம்பர் 30ஆம் தேதி முதல் 55 நாட்கள் இடைவிடாமல் தேடும் பணியை மேற்கொள்ள உள்ளதாக மலேசிய அரசு கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, விமான பாகங்களை அந்நிறுவனம் கண்டறிந்தா, 70 மில்லியன் டாலர் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow Us