திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள தச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன், ஆகாஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கடந்த 18ஆம் தேதி கொலை செய்யப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் புதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட இளைஞர்களான ஜானகிராமன், ஆகாஷ் ஆகிய இருவர் காணாமல் போனதாக அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆகாஷ் மற்றும் ஜானகிராமன் காணாமல் போன தினத்தன்று அவர்களுடன் இருந்த நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், நல்லபாண்டியன் மற்றும் காமேஷ்மணி என்ற இருவர் கடந்த 18ஆம் தேதி ஜானகிராமன், ஆகாஷ் ஆகிய இருவரையும் கொலை செய்து ஊத்துக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பகுதியில் புதைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

கொலையில் தொடர்புடைய நல்லபாண்டியன் ஊத்துக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்  ஆஜர் ஆகிய நிலையில் காமேஷ்மணியை போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முன்விரோதத்தால் இந்த கொலை நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் புதைக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்களையும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

Advertisment

சார்பதிவாளர் அலுவலகத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.