ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்கு உட்பட்ட ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு முத்துமணி (வயது 55) என்ற மனைவியும், திவ்யா (வயது 27) என்ற (மாற்றுத்திறனாளி) மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் (03.03.2026), வேட்டையம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் திவ்யா விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்துமணி, சிறிது யோசிக்காமல் அந்த கிணற்றில் குதித்தார். பின்னர், தனது மகளைப் பிடித்துக்கொண்டே, அங்கிருந்த கயிறு ஒன்றைப் பிடித்துக் கொண்டார். அதன் பின்னர், அவர்கள் கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், முத்துமணி உதவி கேட்டுக் கத்தி கூச்சலிட்டார்.
இந்த சத்தத்தைக் கேட்டு அங்கு வந்து பார்த்தவர்கள், கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து அதிர்ந்து போயினர். பின்னர், அவர்கள் கடூர் காவல்துறை மற்றும் நம்பியூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அவர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். பின்னர் கயிறுகள் மூலமாக அவர்கள் இருவரையும் மீட்டனர்.
நீண்ட நேரமாக நீரிலிருந்த அவர்கள் சோர்வடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும், அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாமல் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இந்த முதிய வயதிலும் சற்றும் யோசிக்காமல் தனது மகளின் உயிரைக் காப்பாற்றக் கிணற்றில் குதித்த முத்துமணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், சரியான நேரத்தில் விரைந்து வந்து துரிதமாகச் செயல்பட்டு, அவர்களின் உயிரைக் கைப்பற்றிய தீயணைப்பு வீரர்களின் தீரச் செயலும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us