தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், ஆட்சியைப் பிடிப்பதற்காக அதிமுக - பா.ஜ.க கூட்டணியும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே நான்கு முனைப் போட்டியாக நாம் தமிழர் கட்சியும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளது.

Advertisment

ஆரம்பத்தில் திமுக மற்றும் பா.ஜ.க மட்டுமே விமர்சித்து வந்த விஜய், கடந்த சில தினங்களாக அதிமுகவையும் விமர்சித்து வருகிறார். இதனால் அவ்வப்போது அதிமுக தலைவர்கள், விஜய்க்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரத்தில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சி.வி.சண்முகம், “அவர் வராரு, இவர் வராரு என்று எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. அன்றும் இன்றும் என்றும் நமக்கு ஒரே எதிரி திமுக தான். வைகோ வந்தார், போனார், வந்த வேகத்தில் புயலாக போய்விட்டார். அதன் பிறகு விஜயகாந்த் வந்தார், போய்விட்டார். அதற்கு பிறகு இன்றைக்கு திமுகவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் வந்தார். உடனே மாற்று சக்தி வந்துவிட்டது என்று சொன்னார்கள். அவரும் போய் அவுட் ஆகிவிட்டார். தமிழ்நாட்டுக்கே மாற்றத்தை உருவாக்க வந்த கமல்ஹாசன் கடைசியில் அவர் தொகுதியிலே தோற்று போய்விட்டார். இப்போது இன்னும் பல பேர் வந்திருக்கிறார்கள். சினிமா தியேட்டரில் வேண்டுமென்றால், விசில் அடிக்கலாம், பஸ்ஸை நிறுத்துவதற்கு வேண்டுமென்றால் விசில் அடிக்கலாம்.

ஆனால் அதிமுக இரட்டை இலைக்கு வாக்கு போடுவதை எவனாலும், எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அதிமுக. 53 ஆண்டு காலம் அதிமுக பல்வேறு வெற்றிகளை பெற்றிருக்கிறது. தோல்விகளையும் பெற்றிருக்கிறோம், சோதனைகளையும் பெற்றிருக்கிறோம். இரண்டு முறை இந்த இயக்கம் உடைந்திருக்கிறது. உலகத்தில் பிளவுப்பட்ட இயக்கம் ஒன்றிணைந்து எழுந்து சின்னத்தை பெற்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். தலைவன் போவான், பதவி சுகம் அனுபவித்தவன் போவான் ஆனால் எந்த பதவியும் சுகத்தையும் அனுபவிக்காத தொண்டர்கள் என்றைக்கும் அதிமுகவின் அந்த கரைவேட்டியோடு தான் இருப்பான். இன்னைக்கு இவர் வருவார், நாளைக்கு இன்னொரு வருவார், அதன் பிறகு சிம்பு வருவார் என எல்லோரும் வரலாம். ஒவ்வொரு பத்து ஆண்டு காலத்துக்கும் ஒன்னு முளைக்கும். அதைப் பற்றி நாம் கவலைப்படக்கூடாது. தீய சக்தியை தமிழகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும், விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்கப்படுவது உறுதி” என்று பேசினார். 

Advertisment