கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பம் பகுதியில் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில், இது போன்று பறவைகள் கொத்துக்கொத்தாக இறந்து கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இறந்து கிடந்த பறவைகளின் மாதிரிகளை ஆய்வு செய்த போது, அந்த பறவைகள் பறவைக்காய்ச்சலால் (எச்5என்) பாதிப்பட்டு இறந்ததாகக் கண்டறியப்பட்டது.

Advertisment

இதையடுத்து, அந்த பறவைகளை யாரும் தொட வேண்டுமெனவும், அவ்வாறு பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து கிடைக்கும் பறவைகளை எரிக்க அல்லது ஆழமாகக் குழி தோண்டி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல, சென்னையிலும் அடையாறு மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வாறு பறவைகள் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது. இதுவும் பறவைக் காய்ச்சலால் நிகழ்ந்த சம்பவம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், கடலூரில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடப்பது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் இறந்த காகங்களின் உடல்களை ஆய்வு மேற்கொள்ளப் பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இது பறவைக்காய்ச்சல் தொற்று காரணமாக நிகழ்ந்து இருக்குமோ என்று பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே, பறவைக்காய்ச்சல் குறித்து அரசு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

அதில், ‘பறவை காய்ச்சல் பாதித்த பறவைகளை மனிதர்கள் தொட வேண்டாம். இந்த தொற்றுகளில் இருந்து மனிதர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த தொற்றுகள் மனிதர்களை அவ்வளவு எளிதில் தாக்காது. ஒருவேளை, இந்த தொற்றுகள் மனிதர்களைத் தாக்கும் பட்சத்தில், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், குறிப்பாக உயிரிழப்பு கூட ஏற்படலாம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment