BIHAR Photograph: (VIRUS)
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்காச்சியா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடந்தன. மேலும், சில காகங்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தன. அந்த வழியாக, காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் அந்த காகங்களை மீட்டு சென்றனர். பின்னர், அந்த காகங்கள் போபால் மற்றும் பாட்னாவில் உள்ள ஆய்வகங்களுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில், அந்த காகங்கள் பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்புளுயன்ஸா வைரஸ்) பாதிப்பால் உயிரிழந்தாக உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக தீவிர தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்த நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியிலிருந்து சுமார் பாத்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பறவைக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுவாக, பறவைக் காய்ச்சலானது இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்களால் ஏற்படுகிறது. குறிப்பாக அதிக பாதிப்பை H5N1(வைரஸ்) வகை தொற்றுகள் காட்டுப்பறவைகளிடம் அதிகமாக பரவுகின்றன. பின்பு, இது மற்ற பறவைகளையும் தாக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த தொற்று, ஆரம்பகாலங்களில் பறவைகளை மட்டுமே தாக்கக்கூடியதாக இருப்பினும், காலப்போக்கில் மனிதர்கள் உட்பட பல பாலூட்டிகளையும் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளை இந்த வகை தொற்றுகள் தாக்கும் பட்சத்தில், மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நோய் தொற்று பாதித்த பறவைகளை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறவைக்காய்ச்சல் சம்பந்தமான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை முறைகளையும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow Us