Criticism of Vijay - Nayinar Nagendran's reaction Photograph: (bjp)
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் குறித்த கேள்விக்கு, “பாவம் அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரணும். திரிஷா கிட்ட இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்க முடியும். அதாவது அவர் குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும். முதலில் வீட்டில் இருந்து வெளியே வந்தால் தானே தெரியும்.
களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் அவர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?. ஒருக்காலும் முடியாது. இதுதான் விஜய்க்கு பதில். முதலில் குடும்பஸ்தனாக ஒரு கட்சி நடத்த வேண்டும். அவர் எனக்கு ஆளே கிடையாது. கூட்டம் இருந்தால் என்ன, ஓட்டு வேண்டாமா? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? நானும் ஆஞ்சநேயர் மாதிரி மலையை தாண்டுவேன் என்று சொல்லலாம். நம்பிக்கை தான், ஆனால் அது முடியுமா?'' என்று விமர்சித்திருந்தார்.
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ''இந்த நாட்டை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்'' என குறிப்பிட்டுள்ளார்.
பலரும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காரில் வெளியே புறப்பட்ட நயினார் நாகேந்திரனை சூழ்ந்துகொண்ட செய்தியாளர்கள் விஜய்யை பற்றி நீங்கள் பேசிய கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு தலையை ஆட்டிய நயினார் நாகேந்திரன் உடனே பதில் எதுவும் சொல்லாமல் கார் கண்ணாடியை மேலே ஏற்றினார்.
Follow Us