கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கடந்த 2013ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. ஆனால் அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளை இன்று வரை தீர்க்காமல் உள்ளது. நிதிச் சிக்கலை காரணம் காட்டி பேராசிரியர் மற்றும் ஊழியர்களை தமிழக அரசின் அலுவலகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் பணிநிரவல் செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கிடைக்ககூடிய சலுகை கூட இவர்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது.

Advertisment

பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள் சிறிய பொருளாதார அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதை தீர்க்க அரசு பல்வேறு காரணங்களை மட்டும் கூறிக் கொண்டே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குறிப்பாக பணி ஓய்வு பெற்ற அடுத்த மாதமே அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு ஊதியம் மற்றும் பண பயன்களை வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் இங்கு 160 பேருக்கு மேல் பணி ஓய்வு பெற்று 7 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை.  இங்குள்ள உதவி பேராசிரியர்கள் பேராசிரியராக பணி உயர்வு பெற்று அதற்கான பணப்பயன்களை வழங்காமல் உள்ளதை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று இன்று வரை வழங்கவில்லை.

Advertisment

அதேபோல் கருணை அடிப்படையில் ஊழியரை பணிக்கு சேர்த்தால் அவரை நிரந்தர பணியாளராக தான் பணி அமர்த்த வேண்டும். அதுதான் விதி. ஆனால் இந்த பல்கலைக்கழகத்தில் 47 பேரை கடந்த 12 வருடங்களாக ரூ. 5000 சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தியுள்ளனர். என்.எம்.ஆர், தற்காலிக மற்றும்  தினக்கூலி ஊழியர்கள் ரூ 5 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்துவார்கள் என்பது குறித்து அரசுக்கு தெரியவில்லை. இது தனியார் நிறுவனத்தை விட இது மோசமான கொத்தடிமையாக உள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அவரும் இதனை உடனே பாருங்கள் என்றார். அப்போது தலைமை செயலாளர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

cdm-au-pro-1
கோப்புப்படம்

பல்கலைக்கழக கூட்டமைப்பு வருகிற 27ஆம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் மாணவர்களின் தேர்வு மற்றும் கல்வி பாதிக்கப்படும் எனவே போராட்டத்தில் ஈடுபட உள்ள கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், நகர செயலாளர் ராஜா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்  மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, இளங்கோ, மதியழகன், கபில்தேவ் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisment