வேலூரில் இன்று (02-02-26) தமிழ்நாடு ஒடுக்கப்பட்டு வாழ்வுரிமை இயக்கம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருமான வீரபாண்டியன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், “தமிழ்நாட்டில் நிலம் இல்லாத பட்டியல் என குடும்பங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலமும், வீடு இல்லாத 2 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?, “தமிழ்நாட்டில் கொலை கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் பொய் சொல்கிறார்கள். உள்துறை அமைச்சகம் மத்திய அரசின் கையில் உள்ளது. இந்தியாவில் நாள்தோறும் கொலைகள் நடைபெறுகிற இடம் எது என்று சொல்ல வேண்டியது தானே மத்திய அரசிடம் தானே உள்துறை உள்ளது. போதைப் பழக்கத்தில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடா? உத்திரப்பிரதேசமா? எந்த இடத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருக்கிறது என்பது உள்துறை அமைச்சகமே வெளியிடட்டும். எனவே கொள்கை பேச முடியாத கட்சிகளால் இழைக்கப்படுகிற அவதூறு தான் இது. எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

Advertisment

இதையடுத்து பல்வேறு துறை அரசு ஊழியர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு?, “கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பூதியம் வழங்காத ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும், சுகாதார ஊழியர்கள் கோரிக்கைகள், கடைநிலை ஊழியர்களின் கோரிக்கைகள், பொதுமக்களின் கோரிக்கைகளோடு தான், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து முறையிட்டு வருகிறோம். மற்ற கட்சிகளை விட கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் அதிக அளவில் மக்களுக்காக போராட்டங்களை நடத்தி வருகிறது. எனவே கோரிக்கைகளை ஏற்று அதனை தீர்க்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் திமுக அறிவித்தது, ஆனால் அதனை செயல்படுத்தவில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?, “அதனை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்” என்று அவர் கூறினார். மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ஏதும் திட்டங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள். அப்படியானால் அமெரிக்க நாட்டின்  பொருளாதார நெருக்கடிக்கு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எந்த அளவுக்கு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பொருளாதாரத்தில் இந்தியா எப்போதும் சரிவை சந்திக்காது. இதற்கு காரணம் இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisment