'Cow should be declared national animal' - Demand raised in UP Photograph: (up)
உத்தரபிரதேசம் மாநிலம், பரேலியில் நேற்று (03-02-26) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் 'கோதான்' என்ற திரைப்படத்தின் சுவரொட்டியை வெளியிட்டார். இந்த திரைப்படம், பசுக்களைப் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்துவதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதன்படி, பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது. "நான் ஒரு இஸ்லாமியக் கண்ணோட்டத்தை முன்வைக்கிறேன். நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, பசுவின் இறைச்சியில் நோய் இருக்கிறது. ஆனால், பசுவின் பால் நமக்கு நன்மை பயக்கும். எனவே நாம் இறைச்சியை உண்ணக் கூடாது. மாட்டிறைச்சி உண்பது நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, பசுவின் பாலை மட்டுமே நாம் அருந்த வேண்டும். நாம் மட்டுமல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் பாலை அருந்தக் கொடுப்பதினால் அவர்கள் நன்மை அடைவார்கள். அதனால்,அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், பசுக்களை வளருங்கள், மாட்டு இறைச்சியை உண்ணாதீர்கள்" எனத் தெரிவித்தார்.
மேலும், "நீங்கள் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், பசுக்களைச் சுற்றிப் பல சர்ச்சைகள் இருப்பதை அறிவீர்கள். எனவே, பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டால், இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பசுவைத் தேசிய விலங்காக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும். பசுவைத் தேசிய விலங்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்" எனவும் கூறினார்.
Follow Us