திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தை, திருவெறும்பூர் தாலுகா காந்திநகர் 8-வது தெருவைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குணசேகரன் நடத்தி வந்தார். குணசேகரனிடம் கடந்த 12.06.2009 அன்று பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக் காவலர் ராமசாமி என்பவர், ‘உன் மேல் டெல்லியில் இருந்து அரஸ்ட் வாரண்ட் வந்திருக்கு’ என்று பொய்யாக கூறி கைது செய்யாமல் இருக்க ரூ.10,000  லஞ்சமாக கேட்டுள்ளார்.  

Advertisment

அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகரன், கடந்த 13.06.2009 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சூரக்குமரன் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர் சூரக்குமரன் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, குணசேகரனிடமிருந்து பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக் காவலர்  ராமசாமி லஞ்சப்பணம் ரூ.10000 கேட்டு பெற்றபோது, கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

Advertisment

இது தொடர்பான வழக்கு, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் சாட்சியங்கள், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினரின் ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பதை உறுதி செய்த திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கினார். 

அந்த தீர்ப்பில், லஞ்சம் பெற்ற வழக்கில் திருவெறும்பூர், பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய முன்னாள் தலைமைக் காவலர் ராமசாமி என்பவருக்கு, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் ஆஜராகி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுத் தர சிறப்பாக வாதாடினார் என்பதும், குணசேகரன் கடந்த 14.02.2019-ல் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment