சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதியன்று தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே கருக்கா வினோத்தை போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் கருக்கா வினோத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisment