திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம். இவர் தனது பெயரில் உள்ள இடத்தில் திருச்சி மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு மேலகல்கண்டார்கோட்டை வருவார் உதவியாளர் சுபேர் அலி முகமது என்பவரை சந்தித்துள்ளார். அப்போது சுபேர் அலி முகமது, முத்துராமலிங்கத்திடம் ரூ.8,000 லஞ்சமாகக் கேட்டு அதன் பின்னர் ரூ.6,500 லஞ்சமாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக ராமலிங்கம் அளித்த புகாரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறையினர் சுபேர் அலி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில்,முத்துராமலிங்கத்திடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.6,500ஐ பெற்ற போது சுபேர் அலியை, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு  திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று (13-08-25) விசாரணை முடிந்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதில், சுபேர் அலி முகமது லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தார். மேலும், மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கினை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்துள்ளார்கள்.