Advertisment

ஓரணியில் தமிழ்நாடு; ‘இந்திய மக்கள் இவ்வாறு தான் நடத்தப்படுகிறார்களா?’ - ஓடிபிக்கு தடை விதித்த நீதிமன்றம்

maduraihighcourt

Court questioned Is this how Indian people are treated? and Interim suspension OTP oraniyil tamilnadu

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியின் சார்பில் ஏழைகளின் குறைகளை கேட்பதும் தமிழக அரசின் திட்டங்கள் ஏழைகளை சேர்ந்திருக்கிறதா என்பதை கேட்டு அறிந்து புதிய உறுப்பினர்களை தி.மு.கவில் சேர்க்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

Advertisment

அதன்படி, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் வீடு வீடாகச் சென்று ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்பதன் விளக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இது அரசியலமை சட்டத்துக்கு விரோதமானது. இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக அழிக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு அதன் அடிப்படையில் வரும் ஓ.டி.பி எண்களையும் கேட்கின்றனர். உறுப்பினர் ஆகவில்லை எனில் மகளிர் உரிமைத் தொகை போன்றவை கிடைக்காது என்று கூறுகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ‘ஓ.டி.பியை எதற்காக கேட்கிறார்கள்?. ஓடிபி விவரங்களை பகிர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். இது தொடர்பாக வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படும்போது எதற்காக ஓடிபி விவரங்களை கேட்கப்படுகின்றன?’ என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு திமுக சார்பில், ‘உறுப்பினர் சேர்க்கைக்காக இந்த பிரச்சாரம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் அரசு வழக்கறிஞரா? அல்லது திமுக வழக்கறிஞரா?. ஆதார் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் அந்த பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்த விவரங்களை விற்பனை செய்தால் என்ன செய்வது?. இந்திய மக்கள் இவ்வாறு தான் நடத்தப்படுகிறார்களா?. கட்சியின் உறுப்பினர் விவரங்களை சேகரித்ததில் தவறில்லை. ஆனால், அந்த விவரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும் விவரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது. எனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் ஓடிபியை பெறக் கூடாது’ என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர். 

madurai high court oraniyil tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe