உத்திர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி எனும் சாமியார் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி வித்யா மடம் எனும் ஆசிரமத்தை நடத்திவருகிறார். இங்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த பகுதியில் பிரபலமான சாமியாராக அறியப்பட்ட அவிமுக்தேஸ்வரானந்தா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.  

Advertisment

இதையடுத்து, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளையின் தலைவர் அசுதோஷ் பிரம்மச்சாரி மஹாராஜ் மற்றும் சிலர் இணைந்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இருப்பினும் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்ய மறுத்த நிலையில், அசுதோஷ் நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவில் அவிமுக்தேஸ்வரானந்தா வித்யா மடத்தின் ஐந்தாவது மடியில் வைத்து சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருந்தார். மேலும், சம்பவம் குறித்த வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சி.டி.யை சமர்ப்பித்தத்துடன், பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.  

Advertisment

அதோடு மட்டுமல்லாமல், அவிமுக்தேஸ்வரானந்தர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், ஆன்மீகப் பணிகள் என்கிற பெயரில் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த பிரயாக்ராஜ் சிறப்பு போக்சோ நீதிமன்றம் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.  

அந்த உத்தரவில், "போக்சோ சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், அதே நேரத்தில் நியாயமாகவும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஜுன்சி காவல் நிலையத்தில் அவிமுக்தேஷ்வரானந்த் மற்றும் முகுந்தானந்த் பிரம்மச்சாரி உட்படச் சிலர் மீது வழக்குப் பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment