‘ஒரு நாள் வீணாகிவிட்டது’ - மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மனுவில் நீதிமன்றம் கருத்து!

bombayhighcourt

Court comments day wasted on petition challenging Maharashtra election results

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருப்பது தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்திற்கும் ராகுல் காந்திக்கும் இடையே தொடர் வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. 

மகாராஷ்டிராவில் கடந்தாண்டு நவம்பரின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் உதவியோடு பா.ஜ.க மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சில தினங்களுக்கு முன்பு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்து பதிலளித்தது. தேர்தல் ஆணையத்தின் எதிர்வினைக்கு பதிலளித்த ராகுல் காந்தி, மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் மகாராஷ்டிராவின் வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை வைத்த போதிலும், கருத்து தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட, அவர் முறையான புகார் அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தது. அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி கடிதம் மூலம் முறையான புகார் அளித்துள்ளார். 

இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அந்த தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சேதன் சந்திரகாந்த் அஹைர் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மகாராஷ்டிராவில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளன. மாலை 6 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை. இந்த தேர்தல் செயல்பாட்டால் பொதுமக்களின் நம்பிக்கையை குறைத்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.குல்கர்னி மற்றும் ஆர்ஃப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘2024 மக்களவைத் தேர்தல் உள்பட முந்தைய பொதுத் தேர்தல்களின் வாக்களிப்பு முறைகள் பற்றி ஏன் இதுபோன்று கேள்வி எழுப்பப்படவில்லை?. மாலை 6 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு முடிவுகள், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு உதவியதாக எந்தவித ஆதாரங்களும் சமர்பிக்கப்படவில்லை. அதை மனுவில் குறிப்பிடவில்லை. இந்த மனுவை விசாரித்ததால், நீதிமன்றத்தின் ஒரு நாள் தேவையில்லாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மனுதாரர் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும், ஆனால் நாங்கள் அவ்வாறு செய்வதை தவிர்க்கிறோம்’ என்று கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

bombay high court Maharashtra Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe