Couple got married after being released on parole Love in prison
வெவ்வேறு வழக்குகளில் சிறைக்குச் சென்ற சிறைப் பறவைகள் தற்போது காதல் பறவைகளாக மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேகா (34) என்ற பெண் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். இவர் திக்சந்த் கம்ரா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது காதலன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருவதையறிந்த நேகா, அவருக்கு உதவி செய்ய நினைத்துள்ளார்ர். இதனால் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான மற்றொரு காதலனான துஷ்யந்த் சர்மாவை கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டார். அதன்படி தனது கூட்டாளிகளுடன் துஷ்யந்த் சர்மாவை கடத்திய நேகா 3 லட்சத்திற்கும் மேல் அவரிடமிருந்து பணத்தை கறந்துள்ளார்.
ஆனால், அவரை வெளியே விட்டால் போலீஸில் தன்னை காட்டிக் கொடுத்துவிடுவாரே என்று நினைத்த நேகா, தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலன் துஷ்யந்த் சர்மாவை கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸுக்கு தெரியவர, கடந்த 2018ஆம் ஆண்டு நேகாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றமும் நேகாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனிடையே, ராஜஸ்தானின் அல்வார் பகுதியைச் சேர்ந்த ஹனுமன் பிரசாத், ஏற்கெனவே திருமணமான சந்தோஷி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். சந்தோஷிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவுக்கு சந்தோஷியின் கணவர் பன்வாரிலால் இடையூறாக இருப்பதாக நினைத்த ஹனுமன் பிரசாத், பன்வாரிலாலை கொலை செய்தார். மேலும், இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சந்தோஷியின் மூன்று பிள்ளைகள் உள்பட நான்கு பேரையும் ஹனுமான் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் 2017ஆம் ஆண்டு நடந்த நிலையில் நீதிமன்றம் ஹனுமானுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
வெவ்வேறு வழக்குகளில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற ஹனுமான் மற்றும் நேகா ஆகியோர் ஜெய்ப்பூர் மத்திய சிறையிலிருந்து ராஜஸ்தான் சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறைக்கு 6 மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தங்களின் பழைய காதலை தூக்கி எறிந்துவிட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதற்காக நேகாவும் ஹனுமானும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். நீதிமன்றமும் அவர்களது கோரிக்கையை ஏற்று திருமணம் செய்து கொள்வதற்காக 15 நாட்கள் பரோலை வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி பரோலில் வெளியே வந்த இருவரும், பரோடாமியோவில் நேற்று (23-01-26) திருமணம் செய்து கொண்டனர். அதே சமயம், இவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கு நேகா மற்றும் ஹனுமனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Follow Us