தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் முன்னாள் அதிபர் எட்கர் லுங்கு மற்றும் தற்போதைய அதிபர் ஹக்கைண்டே ஹிச்சலமா ஆகியோருக்கிடையே கடும் பகை நிலவி வந்தது. இந்த நிலையில், லுங்கு சென்ற ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி தென் ஆப்ரிக்கா நாட்டில் மரணமடைந்தார். ஆனாலும், லுங்குவின் உடல் இதுவரை நல்லடக்கம் செய்யப்படாமல், கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

காரணம், லுங்கு தனது குடும்பத்தாரிடம், ‘எனது இறப்பிற்குப் பிறகு ஹிச்சலமா தன் உடலுக்கு அருகில் வரக்கூடாது’ என வாக்குறுதி பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, லுங்குவின் குடும்பத்தினர் ஜாம்பியாவிற்கு உடலை அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் ஜாம்பியா அரசு, முன்னாள் அதிபரின் உடலை தங்கள் நாட்டில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதன் காரணமாக, அதிபர் ஹிச்சலமாவின் தலைமையிலான அரசு லுங்குவின் உடலைத் தாய் நாட்டிற்குக் கொண்டுவந்து, அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முயற்சி செய்து வருகிறது.

Advertisment

இருப்பினும், அவரின் கடைசி விருப்பத்தைக் காரணம் காட்டி, இந்த முடிவுக்கு லுங்குவின் குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றதையடுத்து, அதிபரின் உடல் அரசிற்கு சொந்தமானது. அதனால், அவரது தனிப்பட்ட விருப்பங்களை விட நாட்டின் மரபுகள் முக்கியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, லுங்குவின் உடலை ஜாம்பியாவிற்கு ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், இதை லுங்குவின் விருப்பத்திற்கு எதிரான முடிவாகக் கருதிய குடும்பத்தினர், இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர். இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படாத நிலை உருவாகியுள்ளது.