தொடர் விடுமுறை எதிரொலியாக திம்பம் மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் - கர்நாடக இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி தமிழகம் -கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. திம்பம் மலைப்பகுதியில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சொல்கின்றன. குறிப்பாக தமிழகம் கர்நாடகா இடையே சரக்கு போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நேற்று இரவு முதலே திம்பம் மலைப்பகுதியில் ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை வரை போக்குவரத்து சீராகாமல் திம்பம் மலைப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் - கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் வனப்பகுதியில் நீண்ட தூரம் வரிசையாக அனுபவித்து நின்று வருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சமீப காலமாக திம்பம் மலைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.