சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பாறைகள் உருண்டு விழுந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கி உள்ள து. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் இரவு நேரங்களில் அதி கனமழையானது பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் நேற்று (14.10.2025) இரவு பெய்த கனமழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள குரும்பாடி என்ற பகுதியில் ராட்சத பாறைகள் விழுந்து சாலையில் கடும் மண் சரிவு ஏற்பட்டது.
அச்சமயத்தில் கோவையிலிருந்து மானம் தாவடி நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு பேருந்து மீதும் ராட்சத பாறைகள் விழுந்தது. இதில் பேருந்தின் முன்புறம் சேதமடைந்தது. இதனையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்றுப் பேருந்து மூலமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மண் சரிவு காரணமாகச் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் கிரேன் உள்ளிட்ட இயந்திரங்களின் உதவியுடன் ராட்சத பாறைகளைச் சாலையில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.