இம்மாதம் 3-ம் தேதியன்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவை பின்பற்றாமல் கோயில் நிர்வாகம் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது. இந்த செயல் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி, உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வெள்ளிக்கிழமை (12-12-25) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதிட்ட அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் தங்களின் வாதத்தில் " இந்த வழக்கு பொது நல மனுவைபோல் தீர்மானிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றும் "மனுதாரருடைய மனுவின் அடிப்படையில் கோவில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட இயலாது" என்றும் தங்களின் வாதங்களை முன்வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு, திங்கட்கிழமை அன்று வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், பாரம்பரியமாக வழக்கம் போல் தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும், தனிமனித விருப்பத்திற்காக கோயில் நிர்வாகத்தின் பாரம்பரிய மரபுகளை மாற்ற முடியாது எனவும் வாதங்களை முன் வைத்தது அரசு தரப்பு.
மேலும், தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவு செல்லாது எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் வாதிட்ட நிலையில், இன்று (16-12-25) தனி நீதிபதி உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை எனவும் நாளை இந்த வழக்கின் மீது ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணை நடத்தலாம் என்றும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளை கூறியிருக்கிறது. அதோடு, தலைமைச் செயலாளர் மற்றும் ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக விலக்கு அளிக்கவும் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/a-2025-12-16-18-58-21.jpeg)