நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய நூலைக் குறிப்பிட்டுப் பேச விரும்பினார். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை. அதே சமயம் பா.ஜ.க. உறுப்பினர் நிஷிகாந்த் துபே பல்வேறு நூல்களை மேற்கொள் காட்டி அவையில் பேசினார். அதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.
அதோடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி இருக்கை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து, “பிரதமர் மோடி அவைக்கு ஏன் வரவில்லை?. அவர் ஏன் பதிலளிக்கப் பயப்படுகிறார்? என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “அவையில் என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரதமரின் நாற்காலியை எப்படி நெருங்கினார்கள் என்பதை அனைவரும் பார்த்தார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கலாம் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள், அவைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.
மக்களவையில் சில உறுப்பினர்களின் நடத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 4ஆம் தேதி (04.02.2026 - புதன்கிழமை) இருந்தது. பிரதமர் மோடியைத் தாக்க எதிர்க்கட்சிகள் தாக்கச் சதி செய்துள்ளனர். இதன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. தவறுதலாக எதுவும் நடத்து விடக்கூடாது என்பதாலேயே நான் தான் பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்றேன்” எனத் தெரிவித்திருந்தார். அதாவது பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டி இருந்தார் .
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/om-birla-2026-02-09-15-53-59.jpg)
இந்நிலையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், “எங்கள் மீதான குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எங்களை மிரட்டிப் பணிய வைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். இந்த கடிதத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்களான பிரியங்கா காந்தி, ஜோதிமணி, சுதா உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
Follow Us