தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணியின் பா.ம.க, டிடிவி தினகரனின் அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஓ.பன்னீர்செல்வமும் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தும் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

Advertisment

அதன்படி, இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷை அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். கட்சி ஆரம்பித்ததில் இருந்து முதல் முறையாக தேமுதிக திமுவுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ், சமீப நாட்களாக ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனை திமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே தமிழகம் வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் கோரிக்கை அல்ல என்றும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற்றுவிடலாம் என்று எண்ணத்தில் இருந்த நேரத்தில், தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் காங்கிரஸுக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் இணைந்து சிறப்பான முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

சமூகநீதி, மதச்சார்பற்ற தன்மை, ஜனநாயகப் பண்புகள் மற்றும் மக்கள் நலக் கொள்கைகளை முன்னிறுத்தும் நோக்கில் உருவான இந்த கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வல்லமை பெற்றதாக இருக்கும். மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளமான எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட இந்த கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்” எனத் தெரிவித்துள்ளார்.