விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (09-01-26) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Advertisment

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு மத்திய பா.ஜ.க அரசு தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பிக்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இந்த விவகாரம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. இது கவலையை ஏற்படுத்துகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளத்தக்கவை என்றாலும் ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காக சினிமாக்கள் தணிக்கை செய்யப்படுவதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் மோதல்களில், கலை மற்றும் பொழுதுபோக்கு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகள் மீதான உங்கள் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதங்களைச் சந்திக்கிறது. இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதியானது. அரசியலை கலையிலிருந்து விலக்கி வைத்து, படைப்பு சுதந்திரத்தை மதிப்போம். மோடி ஜி, நடிகர் விஜய் அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்த்து உங்கள் 56 அங்குல மார்பு உரிமையை நிரூபிக்கவும். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஏற்கெனவே,காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியதும், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் குரல் கொடுப்பதும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு காங்கிரஸ் தாமாக முன்வந்து ஆதரவு குரல் கொடுத்திருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.