தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக - காங்கிரஸ் கூட்டணி, மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பாகத் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “திமுக -காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் நிச்சயம் இணக்கமாக இருக்கும். மற்றவர்கள் நினைப்பது மாதிரி இல்லை. ஊடகங்கள் அது போன்ற (திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் இருப்பது போன்று) ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இரு கட்சியினரும் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் (திமுகவுக்கும்) தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். 

Advertisment

இது இடையில் உள்ள சிலர் கிளப்பிவிடும் பிரச்சனை. கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என்று திட்டமிட்டு சதி செய்கின்றனர். அதனைப்பற்றி திமுகவும், காங்கிரஸும் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.  அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “எங்கள் (காங்கிரஸ்) கட்சிக்கும் ஒரு கருத்து உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து உள்ளது. எங்கள் கட்சி தலைவர்கள் அவருடைய கருத்தைச் சொல்கிறார்கள். 

Advertisment

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய கருத்தையும், கட்சியின் கருத்தையும் கூறுகிறார். தமிழ்நாட்டில் என்ன நாட்டு நடப்பு உள்ளது என்பது  பற்றியும் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக  எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி, அகில இந்தியத் தலைவர், முதலமைச்சர் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள். இதில் அவர் இப்படிச் சொல்லிவிட்டார். இவர் இப்படிச் சொல்லிவிட்டார். இதனால் கூட்டணிக்குள் ஒரு பிணக்கு இருக்குமா?. பிரச்சனை இருக்குமா?. விரிசல் வருமா? என்று நிறையப் பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது மாதிரி எதுவும் வருவதற்கு வாய்ப்பில்லை. ஒரு போதும் பாரதிய ஜனதா கட்சியும், அதனுடைய அங்கமாக இருக்கின்ற அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். 

india-today-mks

தமிழ்நாட்டு நலனைத் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் அவர்கள். தமிழ்நாட்டு மக்களை முதுகில் குத்தியவர்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியவர்கள். ஒரு வாரத்துக்கு முன்னாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவிப்பு கூட கிடையாது. இதை யார் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் சார்பில் நாளைக்கு (12.02.2026) ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம். இந்தியா கூட்டணி சார்பாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக தொழிற்சங்கங்கள் எல்லாரும் சேர்ந்து காலை ஒரு ஆர்ப்பாட்டம், மாலை ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

Advertisment

இது குறித்து ஏன் அதிமுக வாயைத் திறக்கவில்லை?. இதெல்லாம் யாரும் கேட்கவில்லையே? தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களான நீங்கள் எப்படி மக்களைப்  பார்க்கப் போகிறீர்கள். எப்படித் தேர்தலைச் சந்திக்கப் போகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு விபரம் இல்லாதவர்களா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள். திட்டங்கள் தீட்ட மாட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான சிந்தனையில் உள்ளவர்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள். அதனால்  இந்த தேர்தலைச் சந்திப்பது அரசியல் கட்சிகள் என்பதை விடத் தமிழ்நாட்டைத் தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி. எங்களுடைய கூட்டணி தமிழ்நாடும் மதவாத சக்தி தான் மோதப் போகிறது” எனப் பேசினார்.