தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 22ஆம் தேதி சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி. வேணுகோபால் வழங்கியதாகவும், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

அதே சமயம் பதிலுக்கு கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் போன்ற புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க சிரமம் உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினும் கூறியதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருக்கிறது என்று  கிரிஷ் சோடங்கர்  கூறியுள்ளார்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “இப்போது அவர் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். 

எதுவாக இருந்தாலும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்கும் ராகுல் காந்தியும், கார்கேவும், சோனியா காந்தியும், கே.சி. வேணுகோபால் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் பணிவோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “திமுக காங்கிரஸ் கூட்டணி எப்படி உள்ளது?” எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் வசந்த், “நன்றாக உள்ளது.  நேற்று முன்தினம் கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்திருந்தார். இரண்டு நாட்கள் இங்கிருந்து பல நலத் திட்டங்களை கன்னியாகுமரிக்குக் கொடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாகக் கூட்டணி வலுமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

Advertisment