Congress MP Manickam Tagore support of Vijay's jananayagan movie
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை (09-01-26) திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தயாரிப்பு நிறுவனத்தின் வாதத்தையும், தணிக்கை வாரியத்தின் வாதத்தையும் கேட்டறிந்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தது.
நாளை ரிலீசாகும் படத்துக்கு நாளை காலை தீர்ப்பு வழங்கப்படுவதால், ஜனநாயகன் படத்தை ஒத்திவைப்பதாகவும் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், திரைத்துறையில் இருந்து விஜய்க்கு ஆதரவு குரல்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆர்.எஸ்.எஸ் பிரச்சார திரைப்படங்கள் ஈர்க்கப்படாமலும், நம்பகத்தன்மை இல்லாமலும், பொது நலன் இல்லாமலும் இருக்கும்போது, ​​மோடி அமித் ஷா ஆட்சி நம்பிக்கையுடன் அல்ல, கட்டுப்பாட்டோடு பதிலளிக்கிறது. இப்போது திரைப்படத் துறை நெருக்கடியில் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஆனால் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் கீழ் இந்த உரிமை சட்டம் பயத்தின் மூலமாக பலவீனப்படுத்தப்படுகிறது.
அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி ஆகிய துறைகள் எதிர்ப்புகளை அடக்குவதற்கான முன்னணி அமைப்புகளாக மாறிவிட்டன. தற்போது திரைப்படங்களையும், கருத்துக்களையும் கட்டுப்படுத்த தணிக்கை வாரியம் கூட ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாகக் மாற்றப்படுகின்றன. அதே நேரத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் கலாச்சாரமாக மாற்றப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு பாதுகாப்பு தேவை. அதிகாரத்தின் முன் கலை, மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us