Congress executives express their preference Vijay alliance
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் நாளுக்கு நாள் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்த போதிலும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படையாக எழுப்பி வருகின்றனர். இதற்கு திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதனால் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசியது மட்டுமல்லாமல் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்தனர். அதில் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பேசியதாவது, “இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழக காங்கிரஸ் கட்சியை பற்றி பேசுகிறார்கள். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை ஆரம்பித்தவன் இந்த அடியேன் தான். உசிலம்பட்டி கூட்டத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தயங்கி தான் பேசினேன், தவறாக பேசவில்லை. ஆட்சியில் பங்கு கொடுங்கள் இல்லையென்றால் விஜய் கூட்டணியில் போயிருவோம் என்று சொன்னேன், வேறு எதுவும் தவறாக பேசவில்லை. ஆனால், திமுகவினர் தப்பா பேசுறாங்க. ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியினுடைய உரிமை. அன்றைக்கு மைனாரிட்டியாக இருக்கும் போது நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. ஆனால் இப்போது வாயை விட்டு கேட்கிறோம். அப்படி கேட்டும் இல்லை என்று முதலமைச்சர் வாயில் இருந்து வந்துவிட்டது. அதன் பின்னர், ஆட்சியில் பங்கு கொடுங்க என்று எல்லோரும் சேர்ந்து கேட்கிறோம்.
பங்கு தரவில்லை என்றால் மக்களே முடிவு செய்வார்கள் என்று நம் எம்.பி மாணிக்கம் தாகூர் சொல்லிவிட்டார். 40 சீட்டுக்கு மேல் அதிக சீட்டு வாங்கிவிட்டோம் என்றால் திமுக மைனாரிட்டியாக வந்துவிடும். கண்ணெதிரிலேயே அதிமுக பா.ஜ.க கூட்டணி இருக்கிறது. இப்போது விஜய்க்கு 30% ஆதரவு, தனித்து நின்றாலே வந்துவிடும். நம் காங்கிரஸ் கட்சி அதில் இணைந்தது என்றால் தட்டி தூக்கி விடுவோம். காங்கிரஸை விஜய் அழைக்கிறார். நாம் அங்கு போக வேண்டும் என்ற முடிவில் இல்லை. ஆனால் திமுக வம்பாக நம்மை தள்ள பார்க்கிறது. ஆகவே ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கேட்கிறோம். இல்லையென்றால் விஜய் கூட்டணி இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ பார்த்துவிடுவோம். இழப்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றுமில்லை. தமிழகத்தில் ஒரு பொன்னான எதிர்காலத்தை காங்கிரஸ்காரர்களும் விஜயும் இணைந்து உருவாக்கும். ஆட்சியில் பங்கு என்று திரும்ப முதல்வர் சொன்னால் தப்பில்லை. உங்களுக்கு நேரம் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது தான் எங்களுக்கு ஆசை” என்று பேசினார்.
Follow Us