தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 16 முதல் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாட்டை (India AI Impact Summit 2026) இன்று (20-02-26) வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற உலகளாவிய ஏஐ உச்சி மாநாடுகளில் இது மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளிட்ட உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்கள், 40-க்கும் மேற்பட்ட உலக மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுமார் 500 முன்னணி நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். கூகுள், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்கள் ஏஐ கண்காட்சியில் தங்கள் புதுமைகளை வெளிப்படுத்தியுள்ளன.

Advertisment

இந்த சூழ்நிலையில் மாநாட்டின் தொடக்கத்தில் பல்வேறு நிர்வாகக் கோளாறுகள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. முதல் நாளில் 70,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் நீண்ட வரிசைகள், உள்ளே நுழைவதில் தாமதம், பாதுகாப்பு சோதனைகள் காரணமாக அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டது போன்ற பிரச்சினைகள் எழுந்தன. சில கண்காட்சியாளர்கள் தங்கள் உபகரணங்கள் திருடப்பட்டதாகவும் புகார் அளித்தனர். மேலும், உணவு மற்றும் தண்ணீர் விற்பனை நிலையங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை (UPI, கார்டு) ஏற்கப்படாமல், பணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. டிஜிட்டல் இந்தியா முயற்சியின் கீழ் நடைபெறும் ஏஐ மாநாட்டில் இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இணைய வசதி பிரச்சினைகள், QR குறியீடுகள் செயல்படாதது போன்றவையும் புகார்களாக எழுந்தன.

Advertisment

இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளுக்கு நடுவே உலக அரங்கில் இந்தியாவின் பெயருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் மற்றும் ஒரு சர்ச்சைக்குறிய சம்பவமும் நடந்தேறியது. இந்த உச்சி மாநாட்டில் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள கால்கொடியாஸ் பல்கலைக்கழகம் சீனாவின் யூனிட்ரீ கோ2 (Unitree Go2) என்ற ரோபோ நாயை, தங்களுடைய பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது. உலகளாவிய ஏஐ உச்சி மாநாட்டில் ஏற்பட்ட சர்ச்சைகள் இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், மத்திய அரசு இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும், உலக அரங்கில் இந்தியாவின் பிம்பம் பாதிக்கப்படுமோ என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த குளறுபடிகளுக்கு இடையில் மாநாட்டின் கடைசி நாளான இன்று, காங்கிரஸ் கட்சியினர் திடீரென அங்கு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் பிரதமர் நரேந்திரன் மோடி போட்ட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, இளைஞர் காங்கிரசார் இன்று திடீரென மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்தனர். அங்கு சென்ற அவர்கள் தங்களுடைய சட்டைகளை கழற்றி, ‘பிரதமர் சரணடைந்துவிட்டார்’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட பனியன்களோடு ஊர்வலமாகச் சென்றனர். இதனால் ஏஐ மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் இழுத்து வெளியே அனுப்பினர். 

Advertisment